வெருகலம்பதி ஆலயத்திற்குச் சென்றவர்கள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; 16 பேர் காயம்

தோப்பூர், வீரமாநகர் பகுதியிலிருந்து வெருகல் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற உழவு இயந்திரம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து  (27) மாலை குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், தோப்பூர், வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பு ஓவியம் (64 வயது) என்பவரே உயிரிழந்துள்ளாரெப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 17 பேர்களில், ஐந்து பேர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்கள், அதே இடத்தைச் சேர்ந்த வீ.தனுஜன் (06 வயது),  வீ. நவநீதன் (14 வயது), எம்.பாக்கியராசா (70 வயது), பீ.வள்ளிநாயகி (68 வயது), வீ.மாலனி (35 வயது) என, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள்,  மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.

வீரமாநகர் பகுதியிலிருந்து வெருகல் திருவிழாவுக்காக உழவு இயந்திரத்தில் பக்தர்கள் சென்ற போது, வாழைத்தோட்டம் வளைவில், உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts