சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது ஆண்டு மகா சமாதி தின வைபவம் ஆரம்பம் !

உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகா சமாதி தின நிகழ்வுகள் நேற்று(11) இரவு அவர் பிறந்த காரைதீவில் ஆரம்பமானது .
 
75 ஆவது ஆண்டு மகா சமாதி தினத்தை ஒட்டி, முதல் நிகழ்வாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் சுவாமியின் திருவுருவ சிலை நடும் வைபவம் நடைபெற்றது.
 
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இம் மார்பளவிலான சிலை அங்கு நிறுவப்பட்டு திறந்து வைக்கப்படவிருக்கின்றது .
 
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றத்தோடு இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
 சுவாமியின் 75 வது ஆண்டு மகாசமாதி தினம், அவர் இயற்கை எய்திய  எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருப்பது  தெரிந்ததே.
 
 அதற்கு முன்னோடியாக நேற்று நிறுவப்பட்ட இச்சிலை எதிர்வரும் 19 ஆம் திகதி திறந்து வைக்கப்பட இருக்கிறது.
 
 இந்த நிகழ்வு சுவாமி சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற செயலாளரும், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தருமான கு. ஜெயராஜி தலைமையில் நடைபெற்றது .
 
நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா இரா. குணசிங்கம் ,விபுலானந்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
.
செல்வி ரவீந்திரன் முகூர்த்தனா அடிகளாரின் “வெள்ளை நிற மல்லிகையோ…” என்ற பாடலைப் பாடினார்.
ஸ்தபதி வினாயகமூர்த்தி குமார் சிலை நிறுத்தும் கட்டுமானப்பணி களைச் செய்தார்.

Related posts