பகிடிவதைக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி

பகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி பகிடிவதையுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் பல்கலைக்கழக கல்வியின் தரத்தினை பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்று பகிடிவதை காரணமாக கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என்றும், கடந்த 25 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் காரணமாக உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியிருப்பதாகவும் நாட்டை பொறுப்பேற்கவுள்ள எதிர்கால தலைமுறை மிலேச்சத்தனமாக நடந்துகொள்ள எடுக்கின்ற அத்தகைய முயற்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியின் தரத்தை பேண வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை என்றும் சுட்டிக் காட்டியதுடன்,

பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுதல் பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, இத்தகைய சவாலான நிலைமைகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உரிய நேரத்தில் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, தேசிய உற்பத்தி செயற்பாட்டிற்கு தொழில்நுட்ப மற்றும் கைத்தொழிற் துறைகளுக்கு தேவையான தொழிற் தகைமைகளைக் கொண்ட திறமையான இளைஞர், யுவதிகளையும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ப பயிற்றப்பட்ட தொழிற்படையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பொலன்னறுவையின் புதிய தொழிற்பயற்சி நிலையம் பொலன்னறுவை – ஹிங்குரக்கொட மெதிரிகிரிய வீதியில் தொர தெக பிரதேசத்தில் அமைந்துள்ள 17 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுவதுடன். அதற்கென 6,500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நெதர்லாந்து அரசே இதற்கு தேவையான கடன் உதவியை வழங்குகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இப்பயிற்சி நிலையத்தினால் NVQ 4,5 தேசிய தொழில் தகைமைகளுடன் கூடிய தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 1,325 பேருக்கு வருடாந்தம் முழு நேர கற்கை நெறி வசதிகளை வழங்குவதற்கும் அத்தோடு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிற்துறையை சார்ந்தவர்களுக்கு அவர்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான பகுதி நேர கற்கை நெறிகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள், மோட்டார் தொழில்நுட்பம், மின் இயந்திரவியல், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளின் கீழ் ஐந்து பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 34 முழு நேர தொழில்நுட்ப கற்கை நெறிகள் நடாத்தப்படவுள்ளதுடன், மேற்குறிப்பிட்ட நிர்மாணப் பணிகளை மூன்று ஆண்டுகளில் நிறைவுசெய்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவ்வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டதுடன், திறன் விருத்தி தகவல்கள் உள்ளடங்கிய இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் ரவி ஜயவர்தன, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, நெதர்லாந்து நாட்டின் தூதுவர் Joanne Dloornewaard ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts