படையினர் கைவசமுள்ள பட்டிப்பளை ஆசிரியர் மத்திய பயிற்சி நிலையம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – வியாழேந்திரன்.

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட ஆசிரிய மத்திய பயிற்சி நிலையம் கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக பொலிஸ் காவல் நிலையமாக இயங்கிவருகின்றது. இதனால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்னேடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது. இக் காணி மற்றும் பொது மக்களின் வாழ்வாதார காணிகள், குடியிருப்புக்காணிகள், பாடசாலைகள் போன்ற படையினரின் கைவசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த மூன்று வருடங்களாக குரல்கொடுத்து வருகின்றேன். அத்தோடு இது தொடர்பாக சக பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாது கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் முறகொட்டான்சேனை, குருக்கள்மடம், பட்டிப்பளை போன்ற பகுதியில் உள்ள தற்போது படையினர் கைவசம் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாக படையினர் கைவசம் உள்ள காணிகளை உடனடியாக சில தினங்களில் விடுவித்துத் தருவேன் என வாக்குறுதி அழித்தார். அவருடைய வாக்குறுதியினை அவர் நிறைவேற்ற வேண்டும்.
பட்டிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய பயிற்சி நிலையம் கல்வி நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மூன்று கோட்டங்கள், அறுபத்தி ஏழு பாடசாலைகள், வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவரும், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் நால்வரும், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் மூவரும், சேவைக்கால பயிற்சி ஆலோசகர்கள் பன்னிருவரும், தொழில் வழிகாட்டல் அலுவலகர்கள் இருவரும், அறுபத்தி ஏழு அதிபர்களும், கிட்டத்தட்ட தொள்ளாயிரத்து பன்னிரண்டு ஆசிரியர்களும், பதினையாயிரத்து இரண்டு மாணவர்களும் உள்ள இவ் கல்விவலயத்தில் நிரந்தர ஆசிரியர் மத்திய பயிற்சி நிலையம் மிகவும் அவசியமான காணப்படுகின்றது.
படையினர் கைவசமுள்ள இக்காணி விடுவிக்கப்பட்ட உடன் ஆசிரியர் மத்திய நிலையம் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்ககைளை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிகாரிகளுடன் பேசி உள்ளேன். ஆதற்குரிய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே ஜனாதிபதி அவர்கள் எமக்கு கூறியபடி விரைவில் இக்காணியினை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

Related posts