பாடசாலைகளை மீளஆரம்பிப்பது பற்றி நாளை கிழக்கில் சந்திப்பு!

கொரோனா விடுமுறையின்பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா நாடளாவியரீதியில் அந்தந்த மாகாணக்கல்விப்பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்திவருகிறார்.
 
அந்தவகையில் நாளை(6) புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
 
கிழக்கு மாகாணத்தில் கொரோனாஅச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது பரீட்சைகள் ஏனைய களநிலவரங்கள் பற்றி விரிவாக அவர் கலந்துரையாடவுள்ளார்.
 
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அதுதொடர்பாக கடந்த இருநாட்களாக தனது அதிகாரிகள் குழாத்தினருடன் கலந்துரையாடி திட்டமொன்றை வகுத்துள்ளார்.
 
 
பாடசாலைகளை மீளத்திறந்து கல்விச்செயற்பாடுகளை படிப்படியாக ஆரம்பிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்குமுகமாக கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.சித்ரானந்தா நாடுபூராகவுள்ள ஒன்பது மாகாணங்களின் கல்விப்பணிப்பாளர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துக்கலந்துரையாடி வருகிறார்.
 
இதுவரை தெற்கு வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணஙகளின் கல்விப்பணிப்பாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.
 
நாளை கிழக்குமாகாணத்திற்குவரும் செயலாளர் சித்ரானந்தா தொடர்ந்து வடக்கு ஊவா  மாகாணக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் மத்தியமாகாண கல்விப்பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
 
ஒட்டுமொத்தமாக சகல மாகாணகல்விப்பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் பாடசாலைகளுக்கான விசேட நேரஅட்டவணையைத் தயாரிக்கவிருப்பதாக கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பொதுவான தரம் 10 அதற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும் சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சிநிரலின்படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.
எதுஎப்படியிருந்தபோதிலும் முன்னர் தெரிவிக்கப்பட்டதுபோன்று எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட சாத்தியமில்லையெனத் தெரிகிறது.

Related posts