மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கிடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் மாநகர முதல்வரின் காரியாலத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மற்றும் கிழக்கு மாகாண ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மற்றும் போராளி குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பவற்றை உயர்த்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல், போராளிகளின் பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்தும் முகமான ஒத்துழைப்புகள், உதவிகளை நல்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாநகரசபையினூடாகவும்,நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பு ஊடாகவும் பல்வேறு செயற்திட்டம் தற்போதும் இடம்பெற்ற வருவதோடு தொடர்ந்து இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இதன் போது மாநகர முதல்வர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts