மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக காலநிலை பின்னடைவு மேம்பாட்டு திட்டத்திற்கான சாத்தியவளம் ஆராய்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக நீர் முகாமைத்துவத்தினை மேற்கொண்டு அவ் வெள்ள நீரினை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
 
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மஹாவலி,விவசாயம்,நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் காலநிலை பின்னடைவு மேம்பாட்டு திட்டம் எனும் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
 
இம் மாவட்டத்தில் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (15) தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கவனிக்கப்படவேண்டிய பொருளாதாரம், சூழல், வாழ்வாதாரம், சமுகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரதான விடயங்களும் அவற்றுக்கிடையிலான உபவிடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு தொழிநுட்பப் பிரிவினருக்கும் சம்மந்தப்பட்ட திணைக்கள பங்குதாரர்களுக்குமிடையே கருத்துக் பரிமாறப்பட்டன.
 
இத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாவி கடலுடன் கலக்கும் கல்லாறு மற்றும் டச்பார் முகத்துவாரங்களின் அபிவிருத்தி, சந்திவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள புதிய கால்வாய், கிரானில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம், சித்தாண்டி மற்றம் ஏ-5 தொடக்கம் ஏ-15 பிரதான பாதைகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள நீர் அணை மதில்கள் மற்றும் மகிழவட்டவான் நீர்த்தேக்கம் என்பன இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
 
இதுதவிர உன்னிச்சை அணைக்கட்டினை உயர்த்துதல், தோணாக்கள் புனரமைத்தல், லாவன்யா நீர்த்தேக்கம் மற்றும் கொடபத்தடமன நீர்த்தேக்கம் அமைத்தல் போன்ற திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சாதக பாதக நிலைகளை ஆராய்ந்து மீள்பரிசீலணை செய்யப்பட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னரே இத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
 
இத்தெளிவூட்டும் நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே. கருணாகரன், மட்டக்களப்பு பிராந்திய நீர்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம்;, ஓய்வு நிலை கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் சாமித்தம்பி, மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு செயலாளர் மங்களேஸ்வரி சங்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், விவசாய அமைப்பின் பிரதிநிதி யோகவேல் மற்றும் திட்ட குழுவினர் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts